Monday 1 May 2017

தேசிங்குராஜனின் குதிரைப் பெயர் என்ன?

அவள் விகடன், 02.05.17.





காத்திருக்காதே! வெளியேறுவாழ்வு உணர்கதிரவனைத் தொடுகடலில் மூழ்கு!”- ரூமி. ஆரணி வரை ஒரு நாள் பயணம். பயணங்களில் ஓராயிரம் கேள்விகளுக்கு பதில் காண முடியுமா என்று கேட்டால், நான் ஆம் என்று பதில் சொல்வேன். காரணம்- மோகன் ஹரிஹரன். இந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்த சென்னையின் தலை சிறந்த கட்டிட வடிவமைப்பாளர்களில் ஒருவர். நண்பர்கள் பதினாறு பேருடன் வண்டி சென்னை தாண்டியதும், கையில் வந்தது வினாடி வினாத் தாள் ஒன்று. முதல் கேள்வியே, தேசிங்கு ராஜனின் குதிரைப் பெயர் என்ன? யோசித்து யோசித்து, பதில் தெரியாமல் தோல்வியை ஒப்புக் கொண்டாயிற்று. சென்னையின் வரலாறும், வழியில் தாமல், காவேரிபாக்கம், வாலாஜா, ராணிபேட்டை, ஆற்காடு என எல்லா ஊர்களின் வரலாறும் சிற்றுண்டியோடு சேர்த்து அலசியாயிற்று.

முதலில் நாங்கள் பார்த்த இடம், ஆரணிக் கோட்டையில் உள்ள கைலாசநாதர் கோயில். மேள தாளத்துடன், மாலை, மரியாதையுடன் வரவேற்றனர் கோயில் நிர்வாகிகள். கும்பாபிஷேகத்துக்கு கோயில் தயார் ஆகிக் கொண்டு இருந்ததால்,  மூலவர் வெளிப்பிரகாரத்தில் காட்சி தந்தார். விசேட பூசை முடிந்து கோயிலை சுற்றிப் பார்த்தோம். 13ம் நூற்றாண்டு சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் சம்புவராயர், விஜயநகர மன்னர்களால் எழில் ஊட்டப் பட்டிருக்கிறது இந்தக் கோயில். சோழர் கால பிள்ளையார் சிலை பேரழகுடன் மிளிர்கிறது. கோபுரக் கலசங்களைப் பிரித்து அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அதனுள் இருந்த வரகு தானியத்தை ஆராய்கிறது குழு. பேரிடர் சமயத்தில், உயரமான கலசங்களில் சேமிக்கும் இந்த தானியம், ஊருக்கே உணவளிக்கக் கூடியது. இன்னமும் இந்த நடைமுறை பின்பற்றப் படுவது குறித்த ஆச்சர்யத்துடன் கோயிலுள் இருந்த உற்சவர் சிலைகளை பார்த்து ரசிக்கிறோம். கூந்தல் காற்றில் பறக்க பிரம்மாண்ட தாண்டவத்தில் நடராஜர், சோமாஸ்கந்தர் என நுண்ணிய வேலைப்பாடுடன் கூடிய சிலைகள். வெளிப் பிரகாரத்தில் 1008 லிங்கம், அறுபத்து மூவர் என வரிசையாக உளிகள் செதுக்கிய அற்புதங்கள்.




அடுத்து சென்றது ராபர்ட் கெல்லி நினைவுத் தூபி. கோட்டையினுள் கோரி மைதானத்தில் சுமார் நாற்பது அடி உயரத்தில் நிற்கிறது, ராபர்ட் கெல்லி என்ற சீஃப் கம்மாண்டரின் நினைவுத் தூபி. 1790ல் இதனைக் கட்டியது அவரை போட்டியில் கொன்று வீழ்த்திய கர்னல் விகொர்ஸின் மகன் என்பது கூடுதல் ஆச்சர்யம்.


அடுத்து சென்றது ஆரணியில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள சத்தியவிஜயநகரம் அரண்மனை. வீர சிவாஜியின் தந்தையான ஷாஜி 1640லம் ஆண்டு கர்நாடக போரின் போது தனக்கு விசுவாசமாக பணிபுரிந்த வேதாஜி பாஸ்கர பந்த்துக்கு 192 கிராமங்கள் உள்ளடக்கிய ஆரணி ஜாகிரைப் பரிசளித்தார். கமண்டலநாக நதிக்கரையில் உத்தராதி மடத்தைச் சார்ந்த மாதவகுல சத்திய விஜய சுவாமியின் மூல பிருந்தாவனத்தை ஒட்டி பாஸ்கர பந்த்தின் வழித்தோன்றல்கள் ஆரணி ஜாகிரின் தலமை இடமாக உருவாக்கிய அழகிய நகரம் தான் சத்தியவிஜயநகரம். ராஜபாட்டையும், குதிரை லாயங்களும், “ஸ்டூவர்ட்என்ற கட்டிட முறைப்படி சுமார் 1825ல் கட்டப்பட்டு, 1876ல் விரிவாக்கப்பட்டிருக்கும் திவான் கானா அரண்மனையும் என ஒரு அதியற்புதமான கடந்த காலத்தை நினைவூட்டுகிறது இந்நகரம். வெறிச்சோடியிருக்கும் சன்னலோ, கதவுகளோ அற்ற அரண்மனை, கொரிந்திய வடிவமைப்பிலான தூண்கள், வட்ட வடிவ செங்கல், எதிராளிகளை ஏமாற்ற கதவு போல வடிவமைக்கப்பட்ட சுவர், பிரம்மாண்டமான தாழ்வாரங்கள், சுண்ணாம்புக் காரையும், முட்டையும், கடுக்காயும் கொண்டு இழைத்து செய்யப்பட்ட வழு வழு சுவருடன், ஆங்காங்கே வளர்ந்து தாங்கிப் பிடித்திருக்கும் மரங்களின் துணையுடன் நின்று கொண்டிருக்கிறது. ராணியின் அரண்மனையும், தர்பார் மண்டபமும் அரசால் புனரமைக்கப்பட்டு அழகாக காட்சி தருகின்றன. சர் சிவி ராமன், எஸ் சந்திரசேகர் போன்ற விஞ்ஞானிகளுக்கு ஆரணி பதக்கம் ஒன்றையும் நிறுவி, பரிசு தந்து இருக்கிறார்கள் ஜாகிர்கள். ஒரு சமயம் 182 கார்களுடன் சர்வ வல்லமையுடன் வலம் வந்த ஜாகிர்கள், 1948ல் ஜமீன்தாரி சட்டம் இயற்றப்பட்ட பின் குடியிருந்த அரண்மனையை அரசுக்குப் பறிகொடுத்தார்கள். இன்னும் சில ஆண்டுகள் கழித்து மண்ணோடு இந்த அற்புத அரண்மனையும் மக்கிப் போகும் சாத்தியக் கூறு மிக அதிகம்.






அடுத்து சென்றது, ஆரணியில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள பூண்டிப் பொன்னெழில்நாதர் சமண ஆலயம். கல்வெட்டுக்களின் படி 1305ல் வீரசம்புவன் என்ற சம்புவராய மன்னனால் கட்டப்பட்டு, வீர வீர ஜீனாலயம் என அழைக்கப்பட்ட இந்த ஆலயம் சோழர் கால கட்டிட வடிவமைப்புடன் மிளிர்கிறது. தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில், மூலவரான பரசுவநாதர் ஐந்து அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். அவரது தலைக்கு குடையாக ஐந்து தலை நாகம் ஒன்று, அவர் பாதம் வரை வாலுடன் காட்சி தருகிறது. ஆதிநாதர் என்ற பொன்னெழில்நாதரின் சிலையும் கோயிலுக்கு அழகு சேர்க்கிறது. இவை தவிர 24 தீர்த்தங்கரர்களின் உருவங்கள் வடிக்கப்பட்ட ஒற்றைக்கல் முகப்புகள் இரண்டு உள்ளன. வெளிப்பிரகாரத்தில் லக்ஷ்மி தேவி, சரஸ்வதி தேவி, சந்திரப்ப்ரபநாதர், ஜ்வலமாலினி தேவி, பிரம்மதேவர், தர்ம தேவி, சக்ரேஷ்வரி, பத்மாவதி தேவி என வரிசையாக அணிவகுக்கின்றன சமணக் கடவுளர்களின் சிலைகள். சுற்று வட்டாரத்தில் சுமார் ஆயிரம் சமணர்கள் இருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் ஐந்தாம் தேதி ஆராதனை விழா மிக சிறப்பாக நடைபெருவதாகவும் கோயில் நிர்வாகி தெரிவித்தார். இது தவிர மகாவீர ஜெயந்தி, ஆவணி அவிட்டம் என அத்தனை சமண விழாக்களும் கொண்டாடுகிறார்கள் தமிழ் சமணர்கள்.




மதிய உணவுக்குப் பின்  கண்ணாடி மாளிகை என அழைக்கப் படும் பூசிமலைக்குப்பம் அரண்மனைக்குச் சென்றோம். ஜாகிர்களின் வேட்டையிடமானஷூட்டிங்க் பாக்ஸ்என அழைக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட அரண்மனையைச் சுற்றி ஆயிரக்கணக்கில் மரங்கள் நட்டிருக்கிறார்கள் ஜாகிர்கள். பச்சை வயல் வெளிகளுக்கு ஊடாக வளைந்து நெளிந்து சென்ற பாதையின் முடிவில், அடர்சிவப்பு நிறத்தில், ஐரோப்பிய வடிவமைப்புடன் அசரடிக்கிறது இந்த அழகிய மாளிகை. டபிள் யூ.என். பாக்ஸன் என்ற வடிவமைப்பாளரால் 1850ல் வடிவமைக்கப்பட்டு, 1860ல் எட்டாவது ஜாகிரான ஸ்ரீனிவாச ராவ் சாஹிபால் கட்டப்பட்ட இந்த மூன்று தள மாளிகை, அழகிய நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்தது. தனி சமையலறை, உணவருந்தும் கூடம், புறாக்களுக்கு கூண்டு, ஒவ்வொரு அறையிலும் ஐரோப்பிய முறையிலான கணப்பு அடுப்பு, கூரையில் ஒப்பனைத் தாள், பளிங்குத் தரை என உள்ளம் கவர்கிறது. ஒரு காலத்தில் விருந்தும், கேளிக்கையும் கோலோச்சிய மாளிகையின் வாசல் முதல் சுவர் வரை வரிசையாக பேய்ப்படங்களின் பெயர்களை எழுதி வைத்து அருவெறுப்பு ஊட்டி இருந்தனர் சிலர். வெப்பப் பிரதேசத்தில், காட்டின் நடுவே, அந்த மாளிகையில் தனிமையில் ராணியாக வலம் வந்த ஆங்கிலேயப் பெண் என பரவலாக சொல்லப்படும் பெண்ணின் எண்ண ஓட்டம் என்னவாய் இருந்திருக்கும் என யோசிக்க முயல்கிறேன். 1860ல் இங்கிலாந்து கிளாஸ்கோ நகரில் செய்யப்பட்ட வார்ப்பு இரும்பினாலான குழாய்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட தூண்கள், ஒரு புறம் கட்டிடத்தை தாங்கியும், இன்னொரு புறம் மழைநீரை வெளியேற்றும் வடிகாலாகவும் இரட்டைப் பணியை அழகாக செய்கின்றன. அனைவரும் ஓடிச் சென்று மாளிகையின் முன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். இவர் தான் என்மேன் ஃப்ரைடேஎன்று எங்களுக்கு அன்று முழுதும் துணை வந்து வழிகாட்டிய ஆரணி டைம்ஸ் ஆசிரியரான சுதாகரைப் பாராட்டினார் மோகன். வரும் வழியில் ஆரணியின் ஸ்பெஷலான மக்கன் பேடாவை வாங்கி பத்திரப் படுத்தி ஆயிற்று.


ஒரு திருப்தியான பயணம் சென்ற களைப்பில் உடல் இருந்தாலும், மனம் என்னவோ அரண்மனைகளையே சுற்றி வந்து கொண்டிருந்தது. எப்பேர்பட்ட மன்னர் மன்னரும், அவர் கட்டி ஆண்ட கோட்டையும், இறுதியில் மண்ணோடு மண்ணாகித்தான் விடும் என்ற நிதர்சனம் புரியத் துவங்க, தூக்கம் கண்களை அழுத்திற்று. ஆங்சொல்ல மறந்துவிட்டேனேதேசிங்கு ராஜனின் குதிரைக்கு மூன்று பெயர்கள்- நீலவேணி, பாரா ஹஜாரி, பஞ்சகல்யாணி!


No comments:

Post a Comment

Hey, just let me know your feedback:)